எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கோரியிருந்த திருத்தங்கள் அனைத்தையும் ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மை அடிப்படையில் பார்லிமென்ட் கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டதால், எதிர் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.நாடு முழுதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் ஒழுங்கு முறைப்படுத்த வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை, கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அங்கு இந்த மசோதா ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு கடந்த ஆறு மாதங்களாக பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும், பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும், வக்பு சொத்துக்கள் தொடர்புடைய தரப்பினர், சட்ட வல்லுனர்கள், அதிகாரிகள் ஆகியோரது கருத்துக்களை கேட்டது. 44 திருத்தங்கள்
ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளை சமாளித்து, இந்த மசோதா பல்வேறு கட்டங்களை கடந்து, நேற்று இறுதி கட்டத்துக்கு வந்தது. இந்த மசோதாவில் உள்ள ஒவ்வொரு அம்சம் குறித்தும், விரிவான விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு திருத்தம் மீதும் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, பார்லிமென்ட் கூட்டுக்குழு கூடியதும், எதிர்க்கட்சிகள் வழக்கம்போல கடும் எதிர்ப்பை தெரிவித்தன. அவர்கள் தரப்பில் 44 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. திருத்தங்களுக்கு எதிராக 16 ஓட்டுகளும், ஆதரவாக 10 ஓட்டுகளும் கிடைக்கவே, இவை அனைத்துமே தோற்கடிக்கப்பட்டன. அதே நேரத்தில், ஆளும் பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி சார்பில், 14 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, இவை அனைத்தும் ஓட்டெடுப்பு வாயிலாக ஏற்கப்பட்டன.கூட்டம் முழுதும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருந்த திரிணமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி வெளியில் வந்து நிருபர்களிடம் கூறுகையில், ''திருத்தங்கள் குறித்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் மீது பேச வாய்ப்பு கேட்டோம்; தரப்படவில்லை. இது, முழுக்க முழுக்க கேலிக்கூத்து; தவறான நடைமுறையாக உள்ளது.''அரசு தரப்பு என்ன நினைக்கிறதோ, அதை செய்வது என முடிவெடுத்து விட்டனர். இன்றைய கூட்டத்தில் எங்களை பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை; விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. ''முக்கிய ஆவணங்கள், கருத்துப் பதிவுகள் உள்ளிட்டவற்றை கேட்டும், எதையுமே எங்களுக்கு தரவில்லை. இன்று, ஜனநாயகத்தின் கருப்பு நாள். அதற்கு காரணமானவர் என்று வரலாற்றில் இடம்பெறப் போகிறார், ஜெகதாம்பிகா பால்,'' என்றார். கால அவகாசம்
பா.ஜ., - எம்.பி., அபராஜிதா சாரங்கி கூறுகையில், ''அனைவரது கருத்துகளும் பொறுமையாக கேட்கப்பட்டன. அனைவருக்கும் போதுமான கால அவகாசம் தரப்பட்டது. ''ஜனநாயக முறையில் தான் கூட்டத்தை ஜெகதாம்பிகா பால் நடத்தினார். கூட்டத்தை நடத்தவிடாமல் கல்யாண் பானர்ஜி தான் இடையூறு செய்தார்,'' என்றார். இதையடுத்து, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த சட்டத் திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்கள்
* நாடு முழுவதுமுள்ள வக்பு வாரிய அமைப்புகளில், முஸ்லிம் சமூகத்தை சாராதவர்களும் இடம்பெற வேண்டும் * குறைந்தபட்சம் இரண்டு பெண்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் * மத்திய வக்பு கவுன்சிலில், ஒரு மத்திய அமைச்சர், மூன்று எம்.பி.,க்கள், இரண்டு முன்னாள் நீதிபதிகள், தேசிய அளவில் நன்கு அறிமுகமான நான்கு தனிநபர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் * இவர்களில் எவரும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வக்பு கவுன்சிலுக்கு, நிலம் உரிமை கோரும் அதிகாரம் இனி இருக்காது * வக்பு வாரியங்களுக்கு நன்கொடை தரப்படுவதில் கட்டுப்பாடுகள் வரும். அதாவது, நன்கொடை வழங்கும் முஸ்லிம்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளாக தங்கள் மத நம்பிக்கையை தீவிரமாக கடைப்பிடித்து வந்திருக்க வேண்டும்இதுபோன்ற திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்கட்சிகளுக்கு ஆதரவு இல்லை'
பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறியதாவது: இந்த கூட்டத்தில் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில், தே.ஜ., கூட்டணியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினரும் சில திருத்தங்களை பரிந்துரை செய்திருந்தனர். அவர்கள் கோரிய ஒவ்வொரு திருத்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொன்றின் மீதும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆனாலும், அவர்களுக்கு 10 ஓட்டுகள் மட்டுமே ஆதரவாக இருந்தன. 16 ஓட்டுகள் அவர்களது திருத்தங்களுக்கு எதிராக இருந்தன. தவிர, தே.ஜ., கூட்டணி கொண்டு வந்த திருத்தங்கள் சிலவற்றையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். மொத்தத்தில் ஜனநாயக அடிப்படையில் தான் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -