சென்னை: 'கரூர் சம்பவத்தில் உண்மை வெளிவர, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்திற்கு வாய்த்திருக்கும் முதல்வர் எப்படிப்பட்டவர் என்பதற்கு, அவர் வெளியிட்டுள்ள, 'போட்டோ ஷூட்' வீடியோவே சாட்சி. நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது, எவ்வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதேசமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன். அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதுாறு பரவுகிறது என்று, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்; என்ன அவதுாறு பரவியது? தி.மு.க.,வினர், 'தமிழ்நாடு மாணவர் சங்கம்' என்ற பெயரில், 'போஸ்டர்' ஒட்டிக் கொண்டு இருக்கின்றனரே, அந்த அவதுாறா? பிரசாரம் செய்ய, காவல் துறை ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், தி.மு.க.,வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப்பற்றி பொதுமக்கள் பேசுவது வதந்தியா? தி.மு.க., அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டார். முதல்வர் ஸ்டாலினின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி, கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு, 'போட்டோ ஷூட்' எடுத்த கையோடு, துபாய் சுற்றுலாவுக்கு பறந்து சென்று விட்டார். இதுதான் பொறுப்போடு நடந்து கொள்வதா? தி.மு.க., அரசின் அலட்சியத்தால், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் உட்கார்ந்து, அதை கண்டு களித்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து பேர் உயிரிழந்தனர். அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா; யாரை ஏமாற்றப் பார்க்கிறார் ஸ்டாலின்? எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பலஅரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் ஆணையம் விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதை பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் கண்துடைப்பு ஆணையம் என்பதைக் காட்டுகிறது. மக்களுக்கு தி.மு.க., அரசின் விசாரணை மீது, நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கு உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.