புதுடில்லி: பா .ஜ., - தி.மு.க., என, பல அரசியல் கட்சிகளுக்கு வியூக அமைப்பாளராக இருந்தவர், பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர். 2024ல், ஜன் சுராஜ் என்ற தனிக்கட்சி ஆரம்பித்தார். கடந்தாண்டு நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், இவர் கட்சி ஒட்டுமொத்த, 243 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 236 தொகுதிகளில் டிபாசிட் போனதுடன், வெறும், 3.3 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. தேர்தலில், கிஷோர் போட்டியிடவில்லை.ஆனால், இப்போது களத்தில் இறங்கியுள்ளார், கிஷோர். பாட்னாவில் உள்ள ஒரு சட்டசபை தொகுதி பங்கிபூர். இந்த தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்த நிதின் நபின், கட்சியின் தேசிய தலைவரானதுடன், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் ஆகிவிட்டார். அதனால், பங்கிபூரி தொகுதிக்கு வரும் 30ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் தான் போட்டியிடுகிறார் பிரசாந்த் கிஷோர்.'பா.ஜ., வேட்பாளராக ஒரு நாயை நிற்க வைத்தால் கூட வெற்றி பெற்றுவிடும்' என, பா.ஜ.,வினர் கூறி வந்தனர். பா.ஜ.,வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், திடீரென வேட்புமனுவை வாபஸ் பெற்று விட்டார். இது பா.ஜ.,விற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.'பா.ஜ.,வில் பிரச்னை என்பதையே இது காட்டுகிறது' எனக்கூறும் பிரசாந்த் கிஷோர், தனக்கு வெற்றி நிச்சயம் என்கிறார். பீஹார் தேர்தல் என்றாலே ஜாதி ஓட்டுகள் தான். இந்த தொகுதியில் மெஜாரிட்டியாக உள்ள பின்தங்கிய வகுப்பான, காயஸ்த் ஜாதியைச் சேர்ந்தவர் பா.ஜ., வேட்பாளர். ஆனால், பிரசாந்த் கிஷோர் மெஜாரிட்டி வகுப்பினர் அல்ல. ஆக., 3ல் இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது, மக்கள் கிஷோரை ஆதரிக்கின்றனரா என்பது தெரிந்துவிடும்.