- நமது நிருபர் -சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், பா.ஜ., கூட்டணியில் இருந்து த.மா.கா., விலகியது. இந்நிலையில், காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், 'தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய, காங்., பாரம்பரியம் கொண்ட தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என, அழைப்பு விடுத்தார். மேலும், வாசனின் தந்தையும், மறைந்த த.மா.கா., நிறுவன தலைவருமான மூப்பனார் பிறந்த நாளில், மூப்பனாரை புகழ்ந்து மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, காங்கிரசுக்கு ஆதரவாக வாசன் பேசி வருகிறார். த.மா.கா., நிர்வாகிகள் கூறியதாவது: டில்லியில் நடந்த, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எழுதிய நுாலின் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலை, த.மா.கா., தலைவர் வாசன் சந்தித்து பேசினார். இருவரும் பழைய நட்பை புதுப்பித்து கொண்டனர். தமிழக உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க., கூட்டணியில் இடம் பெறவும், காங்கிரசுடன் இணைந்து செயல்படவும் வாசன் விரும்பு கிறார். விரைவில் டில்லி செல்லும் அவர், காங்கிரசில் இணைவதா அல்லது அதன் கூட்டணியில் இணைவதா என்பது குறித்து, காங்., மேலிட தலைவர்களிடம் பேச உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்பாக செயல்படுகிறது
த.வெ.க., அரசு தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு பின், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய கட்சிக்கு மக்கள் வாய்ப்பளித்து உள்ளனர். அதனால், கூட்டணி கட்சிகளுக்கு இனி முக்கியத்துவம் இல்லை என்று அர்த்தமல்ல. இனி வரும் தேர்தல்களை, பெரும்பாலான கட்சிகள் கூட்டணியோடு தான் சந்திக்கும். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றுக்கு பின்னரே, மக்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பது தெரியும். த.வெ.க., அரசு, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக செயல்படுகிறது. - வாசன், தலைவர், த.மா.கா.,