| ADDED : செப் 06, 2011 01:01 AM
புதுச்சேரி: ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் தமிழகப் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர், 38, இவர் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி இரவு புவன்கரே வீதி ரயில்வே கேட் அடுத்த தியாகுமுதலியார் நகர் திருப்பத்தில் கத்திக் குத்துடன், ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மக்கள் மீட்டு, மற்றொரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்று இரவே பாஸ்கர் இறந்தார்.முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு போலீசார், உள்ளூர் க்ரைம் போலீசார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடலூர், சிதம்பரம், காரைக்கால், சென்னை ஆகிய பகுதிகளில் தேடி வருகின்றனர்.