| ADDED : ஜூலை 26, 2024 04:08 AM
புதுச்சேரி: புதுச்சேரியை ஆளும் என்.ஆர் காங்., - பா.ஜ., அரசின் அமைச்சர் சாய்சரவணன்குமார் ஐகோர்ட்டில் தொடுத்துள்ள வழக்கில் புதுச்சேரி தலைமை செயலர் உள்பட 7 அதிகாரிகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சராக உள்ளவர் சாய்சரவணன்குமார். ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.,வான இவர் சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தில் அரசு பள்ளி அருகில் கடந்த 2006ம் ஆண்டு வீடு இல்லாத 102 பேருக்கு வீட்டுமனைகள் கொடுப்பதற்காக நகர அமைப்பு குழுமம் மூலம் திட்டமிடப்பட்டது. இதற்காக நில அளவை துறை வாயிலாக நிலம் கையகப்படுத்தப்பட்டது.ஆதிதிராவிடர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இந்த மனை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனார். இந்த பயனாளிகள் பட்டியலில் உண்மையான பயனாளிகள் இடம் பெறவில்லை என, சென்னை ஐகோர்ட்டில் தடையுத்தரவு பெறப்பட்டது. இந்த தடையுத்தரவு பல ஆண்டுகளாக அப்படியே உள்ளது.இதனால் பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்க முடியவில்லை. நிலம் எடுத்ததற்கான நோக்கமும் நிறைவேறவில்லை. எனவே தடையுத்தரவை விலக்கி புதிய கமிட்டி அமைக்க வேண்டும். பயனாளிகளை இறுதி செய்ய வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என, கூறப்பட்டு இருந்தது.இந்த ரிட் மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவினை விசாரித்த நீதிபதி, மனுதாரர் புதுச்சேரி நில மானிய விதிகள், 1975- சட்டத்தின் நடைமுறைகளைப் பின்பற்றி, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுவதற்காக இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2020 ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஏற்கனவே இந்த நீதிமன்றத்தின் முதல் பெஞ்ச் முன் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக தடையும் அளிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரருக்கான வழக்கறிஞர் சமர்ப்பித்துள்ளார்.இந்த வழக்கை தலைமை நீதிபதியின் முன் தகுந்த உத்தரவுகளுக்காக வைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகின்றது என்றார்.இவ்வழக்கில் புதுச்சேரி தலைமை, மாவட்ட கலெக்டர், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் உள்பட 7 பேர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளை எதிர்த்து ஏன் ரிட் மனு
கூடப்பாக்கத்தில் 150 பேருக்கு மனைப்பட்டா வழங்க நிலம் கையகப்படுத்தப்பட்டும், கோர்ட் தடையுத்தரவு காரணமாக ஏதும் செய்ய முடியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக நில அளவை துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளையும் அமைச்சர் சாய்சரவணன்குமார் அழைத்து பேசியும் ஏதும் நடக்கவில்லை. தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோப்பு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. அனைவரும் கோர்ட் தடையுத்தரவை காரணம் காட்டி தட்டி கழித்தனர். இதனையடுத்து ஐகோர்ட்டில் அமைச்சர் சாய்சரவணன்குமார் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.அமைச்சர் சாய்சரவணன்குமார் கூறும்போது, 'நான்கு 30 தொகுதி அமைச்சராக இருந்தாலும், ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். இத்தொகுதியில் மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தினை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆதிதிராவிடர் மட்டுமின்றி அனைத்து சமூகத்திற்கும் இதனால் பயன் ஏற்படும். இதனால் தான் தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் இந்த ரிட் மனுவினை தாக்கல் செய்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளேன்' என்றார்.