சமுதாய நலக்கூட சுவர் இடிந்து 3 வாகனங்கள் சேதம்
பாகூர் : சார்காசிமேடு கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தின் சுவர் இடிந்த விழுந்ததால் பரபரப்பு நிலவியது. ஏம்பலம் அடுத்த சார்காசிமேடு கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமூதாய நலக்கூடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாததால் விரிசல்கள் ஏற்பட்டு பாழடைந்து உள்ளது.சமுதாய நலக்கூட வளாகம் முழுதும் குப்பைகள் கொட்டி, கால்நடைகள் கட்டும் கொட்டகையாக மாற்றினர். ஆபத்தான நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை இடித்து அகற்றி, அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதனிடையே நேற்று அதிகாலை சமுதாய நலக்கூடத்தின் பின்புற பகுதியில் இருந்த படிக்கட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக், ஒரு கார் சேதமானது.மக்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.