மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சீராய்வுக் கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சீராய்வுக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறைச் செயலர் மணிகண்டன், இயக்குநர் இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பெங்களூரை சேர்ந்த சி.ஐ.சி.இ.எப். மும்பையைச் சேர்ந்த எப்.எஸ்.ஐ, கொச்சியைச் சேர்ந்த சி.எம்.எப்.ஆர்.ஐ, ஐதராபத்தை சேர்ந்த இன்காய்ஸ் , கொச்சியைச் சேர்ந்த எம்பெடா, மத்திய அரசின் மீன்வள ஆராய்ச்சி மற்றும் மீன்வள மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், காரைக்கால் மீனவர்கள் பன்னாட்டு எல்லையை தாண்டி மீன்பிடிப்பதாக எழும் தொடர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து கவர்னர் கேட்டறிந்தார். புதுச்சேரி மீன்வளத்தை மேம்படுத்தவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் கவர்னர் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கு தேவைப்படும் படகுகளை மீனவர்களுக்கு வழங்குவதற்கான நடைமுறைகளை விரிவுபடுத்த வேண்டும். அதற்கான வங்கி கடன் வசதிகள் மற்றும் மானியங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு முறையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை கவனிக்க வேண்டும்.மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் என்.சி.டி.சி மூலமாக குறைந்த வட்டியில் பணம் பெறும் வாய்ப்புகளை மீனவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் தேவையான வழிமுறைகளை ஆராய வேண்டும்.அதே சமயம் சர்வதேச பிரச்னையில் இருந்து மீனவர்களை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும். அதற்காக ஆழ்கடல் மீன்பிடித் தொழில் சம்பந்தமான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.