புதுச்சேரி : தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயம், லோக்சபாவிற்கு சென்றால் மாநிலத்தின் உரிமையை மீட்டு எடுத்து புதுச்சேரியில், பல்வேறு திட்டங்களை கொண்டுவருவார் என, அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசினார்.ராஜ்பவன் தொகுதி, முத்தியால்பேட்டை பகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, முதல்வர் ரங்கசாமியுடன், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில், முதல்வர் ரங்கசாமி கடந்த, 2001ம் ஆண்டு, காமராஜர் கல்வி உதவித்திட்டத்தை துவக்கினார். அந்த திட்டம் ஆரம்பித்து, 24 ஆண்டுகள் ஆகின்றன. அவரால், இந்த காலகட்டத்தில், 13 ஆயிரம் டாக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 80 ஆயிரம் பொறியாளர்களை, நம்முடைய புதுச்சேரி அரசு உருவாக்கி உள்ளது. இதற்கு, ரூ. 450 கோடி, செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக, காலை உணவுத்திட்டம், புதுச்சேரியில் தான் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், இந்தியாவிலேயே, கல்விக்கு அதிக நிதி புதுச்சேரியில் தான் ஒதுக்கப்படுகிறது. அதேபோல, சுகாதார அளவீட்டில் நாட்டிலேயே, புதுச்சேரி தான் முதலிடத்தில் இருக்கிறது. முதல்வருக்கு ரங்கசாமியின் முதன்மை எண்ணம், ஏழை எளிய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். அவர்கள் வாழ்க்கைக்கு எப்போதும் உதவவேண்டும் என்பது தான், அவரது நோக்கம். அவர், தேர்தல் வாக்குறுதியில் என்னென்ன சொன்னாரோ, அதை எல்லாமே, நிறைவேற்றி விட்டார். நம் முதல்வர் தற்போது தாமரை சின்னத்தில் 'வாக்கு' கேட்கிறார். சொன்ன வாக்கை காப்பாற்றிய அவரை, நாம் நமது 'வாக்கை' கொடுத்து காப்பாற்ற வேண்டும். நம் வேட்பாளர் நமச்சிவாயம், அதிகப்படியான நாட்கள் அமைச்சராக இருந்த அனுபவம் உடையவர். அந்த அனுபவத்தில், அவர் பார்லிமென்டில் நமக்கான உரிமையை பெற்றுத் தருவார்.இவ்வாறு அவர் பேசினார்.