அஞ்சல் துறை விபத்து காப்பீடு திட்டம்; சிறப்பு முகாம் 6ம் தேதி வரை நீட்டிப்பு
புதுச்சேரி: அஞ்சல்துறை சார்பில் நடந்து வரும் விபத்து காப்பீடு சிறப்பு முகாம், மார்ச் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கமால்பாஷா செய்திக்குறிப்பு:இந்திய அஞ்சல் துறை, இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில், கடந்த 24ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை, சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. பல இடங்களில், சிறப்பு முகாம் நடந்தது. இந்த விபத்து காப்பீடு திட்டத்தில், புதுச்சேரி கோட்டத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர்.தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில், காப்பீடு திட்ட சிறப்பு முகாமை கால நீட்டிப்பு செய்யமாறு கேட்டுக்கொண்டனர். இதனால், வரும் 6ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த காப்பீடு திட்டத்தில், 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இணைந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்ய ஆதார் எண், மொபைல் எண், வாரிசுதாரரின் விபரங்கள் போதும். ஆண்டுக்கு ரூ.320 செலுத்தி ரூ.5 லட்சத்துக்கான காப்பீடும், ரூ.559க்கு ரூ.10 லட்சம் காப்பீடும், ரூ.799 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடும் என, திட்டத்தில் இணையலாம். புதுச்சேரியில் உள்ள அஞ்சலகங்களில், இத்திட்டத்தினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்கள் அறிய தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அனைத்து அஞ்சகங்களை அனுகலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.