மேலும் செய்திகள்
தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு
27-Aug-2024
பாகூர்,: பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகூர் அடுத்த சோரியாங்குப்பம், குருவிநத்தம் தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளையால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, கடல் நீர் உட்புகுந்து குடிநீரின் தரமும் குறைந்து வருகிறது. மணல் கொள்ளையை தடுக்க வேண்டி, கடந்த 2014ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், வருவாய் துறை சார்பில், குருவிநத்தம் கிராமத்தில் பெரியார் நகர் சந்திப்பு, துாக்குபாலம் சந்திப்பு ஆகிய இரண்டு இடங்களில் மணல் கொள்ளை தடுப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது.இதில், வருவாய் துறை, பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி காண்காணித்து வந்ததால், மணல் கொள்ளை தடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு இந்த சோதனை சாவடிகள் மூடப்பட்டு, செயல்படாமல் உள்ளன. இதனால், தென்பெண்ணையாற்றில் மீண்டும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு பகுதியில் இரவு நேரங்களில் சாக்கு மூட்டையில் பைக் மூலமாக மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தேரி அணைக் கட்டு பகுதியில் இருந்த தடுப்பு கட்டையை மர்ம நபர்கள் பெயர்ந்து எடுத்து, அதன் வழியாக நேரடியாக ஆற்றுக்குள் டாடா ஏசி, மினி லாரி உள்ளிட்ட வாகனத்தை கொண்டு சென்று, தடுப்பு அணையின் கீழ் பகுதியில் உள்ள மணலை மர்ம நபர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். இதனால், அணைக்கட்டு பலகீனமாகி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தென்பெண்ணையாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
27-Aug-2024