உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்டாலினுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

ஸ்டாலினுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

திண்டிவனம் : 'கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார்'என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க., பல ஆண்டுகளாக போராடி வருகின்றது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஊராட்சி மன்றத் தலைவருக்கு கூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இது தொடர்பாக கேட்டால் அரசிடம் போதுமான தரவுகள் இல்லை.1987ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய பிறகுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பெற்றோம். வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக நானும், பா.ம.க., நிறுவனரும் முதல்வரை சந்தித்து முறையிட்டபோது, உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்று முதல்வர் உறுதி கொடுத்தும் வழங்காமல் உள்ளார். கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்து இருப்பார். முதல்வர் ஸ்டாலினுக்கு மனசில்லை. சமூக நீதியிலும் அக்கறை இல்லை. தமிழக அரசின் 53 துறைகளில் ஒரு செயலர் கூட வன்னியர் கிடையாது. காவல் துறை உள்ளிட்ட பல துறைகளில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.23 வன்னியர்கள். 21 பட்டியல் இன எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் தான் உள்ளனர். குறைவான எண்ணிக்கையிலுள்ள மற்ற சமூகத்தினருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., முப்பெரும் விழா மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை