| ADDED : மார் 23, 2024 06:20 AM
புதுச்சேரி : ஜவுளி கடை ஊழியரை கத்தியால் குத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை சாமிப்பிள்ளைதோட்டம், லெனின் நகரைச் சேர்ந்தவர் சரவணன், 29; தியாகு முதலியார் வீதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்கிறார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த அருண். இருவரும் கோட்டக்குப்பத்தில் இறந்த நண்பனின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கிருந்து கருவடிக்குப்பம் சென்று சாராயம் வாங்கியபோது, அருணின் நண்பரான எழில் அவர்களுடன் இணைந்து கொண்டார்.மூவரும் சூரிய காந்தி நகர், 2வது குறுக்கு தெருவில் உள்ள ரஞ்சித் வீட்டிற்கு சென்று அவருடன் சாராயம் குடித்தனர். அப்போது, சரவணனுக்கும் ரஞ்சித்திற்கும் தகராறு ஏற்பட்டது. சரவணன் ரஞ்சித்தை கண்ணத்தில் அறைந்தார்.அங்கிருந்த எழில் என் நண்பனை அடித்துவிட்டாயா என கேட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சரவணனை குத்தினார். அருணும், ரஞ்சித்தும் இணைந்து சரவணன் கைகளை பிடித்து கொள்ள எழில் மீண்டும் கத்தியால் பல முறை சரவணனை குத்தினார். அங்கிருந்து ரத்த வெள்ளத்தில் தப்பித்த சரவணன், சாலையில் சென்ற நபரின் உதவியுடன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சரவணன் அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்குப் பதிந்து, அருண், ரஞ்சித், எழில் ஆகியோரை கைது செய்தனர்.