கஞ்சா விற்க சொல்லி மாணவர்கள் மீது தாக்குதல்; வீடியோ வைரலால் சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரம் : சமூக வலைதளத்தில் வைரலாகி வரும், கஞ்சாவை விற்கச் சொல்லி மாணவர்களை, வியாபாரிகள் தாக்கும் வீடியோ, பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. அதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில், கஞ்சாவை ஏன் விற்கவில்லை. கஞ்சா விற்ற பணத்தை ஏன் தரவில்லை எனக் கேட்டு இரு மாணவர்களை, கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.அதிர்ச்சியடைந்த போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்களை தாக்குபவர், பிரபல கஞ்சா வியாபாரிகள் ஒடப்பு சிவா, வினோத்குமார் என்பதும், இவர்கள் தாக்கும் மாணவர்கள், சிதம்பரம் அரசு தொழிற்பயிற்சி கூட மாணவர்கள் என்பதும், ஒடப்பு சிவா தற்போது குண்டர் சட்டத்திலும், வினோத்குமார் வேறு ஒரு வழக்கில் சிறையில் இருப்பதும் தெரிய வந்தது.சிதம்பரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படும் சம்பவம், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், இந்த வீடியோ ௫ மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ௧௬ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.