தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கு பணி ஆணை
புதுச்சேரி: தீயணைப்பு துறையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கான பணி நியமன ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காலியாக இருந்த 58 தீயணைப்பு வீரர் பணியிடங்கள் உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்பட்டனர். அதில், தேர்வு செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 3 பேர் சொந்தக் காரணங்களுக்காக தங்களது பணியினை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அந்த இடங்களை நிரப்பும் பொருட்டு, தகுதியின் அடிப்படையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. சட்டசபை வளாகத்தில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி தீயணைப்பு வீரர்களுக்கு பணி நியமன ஆணையை நேற்று வழங்கினார். இதில், கோட்டத் தீயணைப்பு அதிகாரி மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.