செயின் பறிப்பு ஆசாமியிடம் 15 சவரன் நகை மீட்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட ஆந்திரா வாலிபரிடம் இருந்து 15 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி புதுசாரம், தென்றல் நகர், முதல் மெயின்ரோட்டை சேர்ந்த பிரேமாவதி, 57; கடந்த ஆக., 31ம் தேதி அதே பகுதியில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 5 சவரன் நகையை பறித்து சென்றனர். மறுநாள் இரவு, சாரம் குவிக்குயில் நகர் சரஸ்வதி, 55; என்பவரிடம் 2 சவரன் செயின், ரெட்டியார்பாளையம் மூதாட்டி செல்லம்மாள், 65; கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகர், உமாவதி, 52; என்ற பெண்ணிடமும் அடுத்தடுத்து செயின் பறித்து சென்றனர்.கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, செயின்பறிப்பில் ஈடுப்பட்ட ஆந்திரா கடப்பா துருவ் சந்தோஷ், 34; என்பவரை கடந்த செப். 28 ம் தேதி கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 9ம் தேதி, கடப்பாவைச் சேர்ந்த சையது பாஷா, 36; என்ற வாலிபரை கைது செய்தனர். சிறையில் இருந்த சையது பாஷாவை கோரிமேடு போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். செயின் பறிப்பில் திருடி பல்வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்த 15 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் காவல் முடிந்து சையது பாஷா மீண்டும் காலாப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டார்.