புதுச்சேரி: குடிமை பொருள் துறையில் மேலும் மூன்று முக்கிய சேவைகளை பொது சேவை மையங்கள்வாயிலாக கொடுக்க முடிவு, செய்து தொழில்நுட்ப பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் 1,67,353 மஞ்சள் ரேஷன் கார்டுகள், 1,86,397 சிவப்பு ரேஷன் கார்டுகள் என மொத்தம் 3,50,750 ரேஷன்கார்டுகள் உள்ளன. பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு, புதிய ரேஷன் கார்டு தேவைக்காக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறையை பொதுமக்கள் நாடுகின்றனர். ஆனால், அத்துறை வளாகத்தில் அவ்வளவு சுலபத்தில் சேவைகள் கிடைப்பதில்லை. இது சட்டசபையிலும் எதிரொலித்தது. அப்போது, அமைச்சர் திருமுருகன் ரேஷன் அட்டை சேவைகளை பொது சேவை மையங்கள் மூலமாக விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். அதை தொடர்ந்து ரேஷன் கார்டுகளில் 9 முக்கிய சேவைகளை தங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என குடிமை பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. தற்போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரைச் சேர்த்தல், 14 வயதுக்கு மேற்பட்டோர் பெயரைச் சேர்த்தல், ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயரை நீக்குதல், ரேஷன் கார்டு ஒப்படைத்தல், உறுப்பினர் பெயர் மாற்றம், குடியிருப்பு முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு, இ--ரேஷன் கார்டு பெறுதல், உறுப்பினர் விவரம் புதுப்பித்தல், பொது சேவை மைய வாயிலாக விண்ணப்பிக்க முடியும். இது போன்ற சூழ்நிலையில் மேலும் மூன்று ரேஷன் கார்டு சேவைகளை பொது சேவை மையம் வாயிலாக கொடுக்க குடிமை பொருள் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து குடிமை பொருள் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்து பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கின்றனர்.இந்த சேவையை ஆன்லைன் வழியாக இனி தர முடிவு செய்துள்ளோம். இதேபோல் திருமணம், தனிகுடித்தனம் காரணமாகவும் தனி ரேஷன் கார்டு விண்ணப்பிக்கின்றனர். ரேஷன் கார்டுகளில் இருந்து பிரித்து தர சொல்லுகின்றனர். இந்த சேவையை துறை வரை வந்து காத்திருக்காமல் இனி பொது சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதேபோல் பலரும் மஞ்சள் கார்டுகளில் இருந்து சிவப்பு கார்டுகளாக மாற்றவும் பலர் நாடுகின்றனர். இது தான் தலைவலியாக உள்ளது. இந்த சேவையும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தொழில்நுட்ப பணிகள் முடுக்கிவிட்டுள்ளோம். துறையின் 9 சேவைகளை ஆன்லைனில் மாற்றிய பிறகு அலைச்சல் இல்லாமல் பொதுமக்கள் சேவைகளை பெற முடிகிறது. இந்த மூன்று சேவைகள் அமலுக்கு வரும்போது தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருவோர் இனி குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியம் இருக்காது. இந்த வசதி, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வயதானவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் ரேஷன்கார்டு சேவையை பெற முடியும். ரேஷன் அட்டை சேவையைப் பெறுவதை இது எளிதாக்குகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் https://pdsswo.py.gov.inஎன்ற ஆன்லைன் மூலமாகவோ அல்லது தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள பொது சேவை மையம் மூலமாகவோ இனி சமர்ப்பிக்கலாம் என்றனர். பொதுசேவை மையங்கள் மூலமாக மட்டுமின்றி ரேஷன் கார்டு சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிக்காக, குடிமை பொருள் வழங்கல் துறையில் மூன்று கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் வசதிக்காக, துறை வளாகத்திற்குள் ஒரு பொது சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு ரேஷன் கார்டு சேவைகளை பெறலாம் என்பது குறிப்பிடதக்கது.