பட்டதாரி வாலிபர் கொலை வழக்கு: ரவுடிகள் உட்பட 6 பேரிடம் விசாரணை
வில்லியனுார்: வில்லியனுார் அருகே நடந்த பட்டதாரி வாலிபர் கொலை வழக்கில் ரவுடிகள் உள்ளிட்ட ஆறு பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். வில்லியனுார், வி.மணவெளி அருகே உள்ள திருவேணி நகர், மந்தவெளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் ஆத்துக்கால்பேட்டை சேர்ந்த டாடா ஏஸ் ஓட்டுனர் பிரபாகரன் - கஸ்துாரி தம்பதியின் மகன் ஜனா, 24, படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து மேற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணி உத்தரவின் பேரில், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சப்இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் ஒரு டீம், சிறப்பு அதிரடிப்படை போலீசார் தலைமையில் ஒரு டீம் என இரு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். இதற்கிடையில் நடராஜன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சிவா (எ) சிவபாலன், 22, மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உள்ளிட்ட ஆறு பேரை பிடித்து, போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2024ம் ஆண்டு ஜனாவுக்கும், அரும்பார்த்தபுரம் வசந்த நகரை சேர்ந்த முருகன் மகன் முரளி, 24, ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனா உள்ளிட்ட அவரது நண்பர்கள் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையில் அடைந்தனர். பின், ஜனா ஜாமினில் வெளியே வந்தார். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் ஜனா கொலை நடந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.