15ம் தேதி முதல் 61 நாள் மீன்பிடி தடை காலம்
புதுச்சேரி; புதுச்சேரியில் வரும் 15ம் தேதி முதல் 61 நாள் மீன்பிடி தடைகாலம் என, மீன்வளத் துறை அறிவித்துள்ளது.புதுச்சேரி மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி செய்திக்குறிப்பு;கடல்சார் மீன்வளங்களை நீண்டகாலத்துக்கு நிலை நிறுத்தும் வகையில் வரும் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் நெடுகிலும், கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் மீனவ கிராமம் வரை, காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்துார் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரை, ஏனாம் மீன்பிடிப்பு பகுதியிலும் இந்த தடை விதிக்கப்படுகிறது.கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள், இழுவலை கொண்டு விசை படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது. பைபர் படகிலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.மாகே பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 61 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகு களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும்.