| ADDED : ஜூலை 25, 2025 11:18 PM
காரைக்கால்; ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. காரைக்கால், நெடுங்காலை சேர்ந்த தட்சிணாமூர்த்தி,36; என்பவரிடம், ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த விக்கி (எ) ராஜகணபதி,25; ஜானகிராமன்,25; திருநள்ளாரை சேர்ந்த காயத்திரி,40; ஆகியோரை நெடுங்காடு போலீசார் கைது செய்தனர். நெடுங்காடு வாத்திருப்பு சாலையை சேர்ந்த நீலமோகம்,45; என்பவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இதேபோன்று பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக மேலும், 45 பேர் நெடுங்காடு போலீசில் புகார் அளித்துள்ளனர். மோசடி வழக்கில் கைதானோர் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.