புதுச்சேரி: புதுச்சேரியில் ஏ.எப்.டி., கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் லட்சுமி நாராயணன், காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்புதுச்சேரி நகர பகுதிகளில் குடிநீர் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, பிரான்ஸ் நாட்டிடம் கடன் பெற்று தரமான குடிநீர் வழங்க ரூ.534 கோடிக்கு, ஏ.எப்.டி., முகமையுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம் செய்தது.இதன் மூலம், கிராம பகுதிகளில், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நகர பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. இந்த ஆழ்குழாய் கிணறுகள் கிராம பகுதிகளில் அமைத்து கொடுப்பதற்கு, கால தாமதம் ஏற்படுவதால், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், இடைக்கால நடவடிக்கையாக, நகர பகுதிகளில் தேவைப்படும் இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து கொடுப்பது சம்மந்தமாக வல்லுநர் குழுவை கலந்து ஆலோசித்தார்.அதில் ஒரு நிறுவனம், பல நாடுகளில் அமைந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலைய தொழில் நுட்பத்தை பற்றி விவரித்தது.அதைத்தொடர்ந்து, இடைக்கால நடவடிக்கையாக, ஏ.எப்.டி., கடனை உபயோகிப்பதற்காக, அந்த முகமையுடன்,காணொலி வாயிலாக அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்தாலோசித்தார்.பின், ஏ.எப்.டி முகமை,இது சம்மந்தமாக அனைத்து தொழில்நுட்ப குறிப்புகளை அனுப்பினால் பரிசீலனை செய்து முடிவு எடுக்கலாம் என, கூறியது.இதையடுத்து, அமைச்சர் லட்சுமி நாராயணன், நகரப்பகுதிகளில் சுத்தமான குடிநீர் விநியோகிக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளை துரிதப்படுத்தினார்.