புதுச்சேரியில் அ.தி.மு.க., ஆட்சி மாநில செயலாளர் அன்பழகன் உறுதி
புதுச்சேரி : புதுச்சேரியிலும் அ.தி.மு.க., ஆட்சி நிச்சயம் மலரும் என மாநில செயலாளர் அன்பழகன் பேசினார்.உப்பளம் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவில் அவர், பேசியதாவது:எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நம் இயக்கத்தில் பல்வேறு பதவிகளையும், சுகங்களையும் கண்ட புல்லுருவிகள் தி.மு.க.,வின் கைப்பாவை யாக மாறி விட்டனர். இந்த இயக்கத்தை அழிக்க துணை நிற்கின்றனர். அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்கள் யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.அப்படிப்பட்ட துரோகிகள் தங்களுக்கு தாங்களே புதுப்பெயர் வைத்துக்கொண்டு கட்சி கொடியை தாங்கி பிடித்து அடையாளம் தேடுகின்றனர். அ.தி.மு.க., பெயரையும், கொடியையம் பயன்படுத்த உரிமை இல்லை என, உச்சநீதிமன்றம் வரை உத்தரவிட்டும் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி, பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.இதுபோல எந்த முயற்சியும் மக்களிடம் எடுபடாது. தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை 2026ல் வீட்டுக்கு அனுப்பப்படும். பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி நிச்சயம் அமையும். புதுச்சேரியிலும் அ.தி.மு.க., ஆட்சி நிச்சயம் மலரும். இதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.