அரவிந்தர் ஆசிரமவாசியிடம் ரூ. 6 கோடி மோசடி; போலி பங்கு சந்தை மூலம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமவாசியிடம் போலி ஆன்லைன் பங்கு சந்தை இணையதளம் மூலம் ரூ. 6 கோடி மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி வாழைக்குளம், அப்பாவு நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்த அஷித் குமார் மிஸ்ரா, 67; அரவிந்தர் ஆசிரமம் புக் ஸ்டால் கணக்காளர். கடந்த 20 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்யும் தொழிலும் செய்து வந்தார்.கடந்த அக்டோபர் மாதம், அடையாளம் தெரியாத நபர்களின் வாட்ஸ்ஆப் குழுவில் ஆஷித் குமார் மிஸ்ராவை சேர்த்தனர். அந்த குழுவில் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி, அதிக லாபம் தரும் முதலீடுகள், இரட்டிப்பு லாபம் தரும் முதலீடுகள் குறித்து வாட்ஸ்ஆப் குழுவில் பதிவிட்டு வந்தனர். ஒரு நாள் ஆஷித் குமார் மிஸ்ரா, எப்படி முதலீடு செய்வது என வாட்ஸ்ஆப் குழுவில் கேள்வி எழுப்பினார். உடனே, மர்ம நபர் ஆஷித்குமார் மிஸ்ராவை தொடர்பு கொண்டு, இரட்டிப்பு லாபம் தரும் பங்கு சந்தையில் முதலீடு செய்வது குறித்து பயிற்சி அளித்ததுடன், சிறிய தொகையை முதலீடு செய்ய துாண்டினர்.ஆஷித் குமார் மிஸ்ரா சிறிய தொகையை முதலீடு செய்ததும், உடனடியாக பணம் இரட்டிப்பாக்கி கொடுத்தனர். இதனை நம்பிய ஆஷித் குமார் மிஸ்ரா மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் தொடர்ச்சியாக ரூ. 6 கோடி வரை முதலீடு செய்தார். அவரது ஆன்லைன் பங்கு சந்தை போர்டலில் மொத்தமாக ரூ. 25 கோடி லாபம் கிடைத்துள்ளதுபோல் காண்பித்தது. தனது பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தபோது, ஆன்லைன் போர்ட்டல் பக்கம் முடங்கியது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆஷித் குமார் மிஸ்ரா புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் பணம் ஏமாற்றிய சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
பங்கு சந்தையில் முதலீடுகளை அரசு அறிவுரைப்படி, டிமேட் வங்கி கணக்கு மூலம் மேற்கொள்ள வேண்டும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால், பங்குகள் வாங்கியதிற்கான ஆதாரம் பங்கு தொகை பத்திரங்கள் வழங்க வேண்டும். இவை எதுவும் இன்றி மர்ம நபர்கள் கூறுவதை நம்பி இதுபோல் பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.