சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு தேவை; கவர்னர் கைலாஷ்நாதன் அட்வைஸ்
புதுச்சேரி; சாலை விபத்துகளை குறைக்கவும், உயிர் இழப்புகளை தடுக்கவும் நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பேசியதாவது:தேசிய அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. சாலை பாதுகாப்பு என்பது சட்டங்களை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது மட்டும் அல்ல. அதையும் தாண்டி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொண்டது.இந்தியா, 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்டது. இவ்வளவு மக்கள் தொகை நாட்டில், சாலை பாதுகாப்பை உறுதி செய்வது சவாலான பணி.சமீபத்திய அறிக்கையின் படி, நம் நாட்டில் சராசரியாக, ஒரு மணி நேரத்திற்கு, 53 விபத்துகளும், 19 பேர் இறக்கின்றனர்.புதுச்சேரியில் மட்டும் ஆண்டுதோறும் விலை மதிப்பு இல்லாத 200 உயிர்களை நாம் இழக்கிறோம் என்பது வருத்தமாக இருக்கிறது.போக்குவரத்து விதிமீறல், ஓட்டுனரின் திறமை யின்மை, வாகன குறைபாடு, சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, குண்டும் குழியுமான சாலை இவை யெல்லாம் இதற்கு காரணம். இவற்றை சரி செய்ய வேண்டும் எனில், அனைத்து துறைகளும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.சாலை விபத்துகளால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அது நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு. நாம் ஒவ்வொருவரும் விழிப்போடு இருந்தால் மட்டும் போதாது. நம்மை சுற்றி இருப்பவர்களையும் விழிப்பு அடைய செய்ய வேண்டும்.நம்முடைய பாதுகாப்பு நம்மிடம் இருந்து தான் தொடங்குகிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் சாலை விபத்துகளை குறைக்க முடியும். விபத்துக்களால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.