கொள்ளைபோகும் சங்கராபரணி ஆற்றின் கரை: செட்டிப்பட்டில் வௌ்ள அபாயம்
செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கரைகள் மெல்ல, மெல்ல ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு - திருவக்கரை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை மூலம் தடுப்பணை அமைக்கப்பட்டு, தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தடுப்பணையின் இருபுறம் கிராவல் மண் கொட்டி கரைகள் அமைக்கப்பட்டன.கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது, வீடூர் அணை திறந்தன் காரணமாக, சங்கராபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணையின் இரு கரைகளும் சேதமடைந்தன. குறிப்பாக, செட்டிப்பட்டு கரைப்பகுதி வழியாக மணலிப்பட்டு மேம்பாலத்திற்கு செல்ல அமைக்கப்பட்ட கிராவல் மண் சாலை சேதமடைந்து, உடைப்பு ஏற்பட்டது.ஆனால், ஓராண்டுகளுக்கு மேலாகியும், இதுவரையில் உடைப்பு ஏற்பட்ட கரைப்பகுதி சீரமைக்கப்படவில்லை. இதனால், கனமழையின் போது, தடுப்பணைகளில் தேங்கும் அதிகப்படியான தண்ணீர், வேறுவழியின்றி விவசாய நிலங்களுக்குள் சூழம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கரைப்பகுதியை சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் கரைகளை உடைத்து மெல்ல, மெல்ல ஆக்கிரமிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கரைகள் பலவீனம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, பொதுப் பணித்துறை அதிகாரிகள், கனமழைக்கு முன், உடைப்பு ஏற்பட்டுள்ள தடுப்பணையின் கரைகளை மண் கொட்டி சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.