உஷாரய்யா உஷாரு... சமூக வளைதளங்களில் உலா வரும் ஐ.பி.எல்., போலி டிக்கெட் லிங்க்
சமூக வளைதளங்களில் உலா வரும் போலி ஐ.பி.எல்., டிக்கெட் லிங்கை திறந்து பணத்தை இழக்க வேண்டாம் என, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.இந்தியன் பிரீமியர் லீக், 18வது சீசன் வரும், 21ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான பயிற்சியில், சி.எஸ்.கே., - மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகளைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்னும் துவங்காத நிலையில், சமூக வலைதளங்களில் 'புக் யுவர் டிக்கெட் நவ்' என்ற பெயரில், போலியான விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இதை உண்மை என நினைத்து பலர், பணத்தை இழந்து வருகின்றனர். புதுச்சேரியிலும் பலர் ஐ.பி.எல்., புக்கிங் ஆசையில் பணத்தை இழந்து வருகின்றனர்.அதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை பதிவினை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், கூறியிருப்பதாவது:வரும் 22ம் தேதி சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடக்கும் ஐ.பி.எல்., போட்டி உள்பட அனைத்து ஐ.பி.எல்., போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. எனவே, லிங்கை கிளிக் செய்து கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டினை புக்கிங் செய்யுமாறு போலியான லிங்கை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.இணையவழி குற்றவாளிகள் உங்களிடம் பணம் பறிப்பதற்காக போட்ட துாண்டில் இது. அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். தற்போது புதுச்சேரி இணைய வழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இதுபோன்று பத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர்.எனவே, இணைய வழி குற்றவாளிகள் அனுப்பும் அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு, உங்களுடைய வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு விடும். அத்துடன் உங்களுடைய பணத்தை இழக்க நேரிடும்.பொதுமக்கள் யாரேனும் இதன் மூலம் பணத்தை இழந்து இருந்தால் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 04132276144, 9589205246 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.cybercrime.gov.inஇணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.