புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி ; அடுத்தடுத்து கவர்னரை சந்தித்ததால் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி, ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி கேட்டு வருகின்றனர்.இதற்கிடையே புதுச்சேரியில் களம் இறங்கிய லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாக செயல்பட துவங்கினர். கூட்டணியில் இருந்து கொண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டது என்.ஆர்.காங்., பா.ஜ., இடையே பிளவை ஏற்படுத்தியது.இது தொடர்பாக சட்டசபை பா.ஜ., தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., ஆகியோர் கடந்த வாரம் டில்லி சென்று கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, 3 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், சபாநாயகர் செல்வம் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அங்காளன் தனித் தனியாக சட்டசபை செயலரிடம் கடிதம் அளித்தனர்.இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் நேற்று மதியம் திடீரென கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர். அப்போது, சபாநாயகர் செல்வம் கவர்னர் மாளிகை வந்தார்.கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் கூறியதாவது்:நாங்கள் தனி அணியாக செயல்படவில்லை. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து எங்களது நிலைப்பாட்டை உரிய நேரத்தில் கூறுவோம். இந்த ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் என மாஜி முதல்வர் நாராயணசாமி கூறுவது தவறு. தைரியம் இருந்தால் எதிர்க்கட்சியாக உள்ள காங்., தி.மு.க., அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவார்களா? இவ்வாறு அவர்கள் கூறினர். சபாநாயகர் செல்வம் கூறுகையில், 'அலுவல் ரீதியாக கவர்னரை சந்திக்க வந்தேன். எனக்கு எதிராக 2 எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் கொடுத்தது பற்றி தெரியாது. முதல்வருடன் நெருக்கமாக இருப்பதால் என்மீது சிலர் அதிருப்தியில் இருக்கலாம். நான் அரசு விழாக்களில் பங்கேற்க விதி உள்ளது. எனக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிச்சயம் விவாதிக்கப்படும்' என்றார்.
சபாநாயகருக்கு 'செக்'
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை முடிவு செய்தது. இதனை அறிந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 'எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், உங்கள் பதவியை காலி செய்து விடுவோம்' என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில், தினசரி ஒரு எம்.எல்.ஏ., வீதம் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.அதன்படி கடந்த 19ம் தேதி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, 20ம் தேதி பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் கடிதம் கொடுத்தனர்.இந்த பிரச்னை பூதாகரமாவதற்கு முன், சரி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.