நோணாங்குப்பத்தில் படகு சவாரி துவக்கம்
அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் படகு குழாமில் வெள்ளப் பெருக்கு காரணமாக நிறுத்தப்பட்ட படகு சவாரி மீண்டும் நேற்று துவங்கியது. வீடுர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கடந்த 2ம் தேதி, நோணாங்குப்பம் ஆற்றில், வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. அதில், படகு குழாமில் நிறுத்தி வைத்திருந்த 5 படகுகள் அடித்து செல்லப்பட்டது. அதில், ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற 4 படகுகள் மாயமானது.வெள்ளத்தில், பாரடைஸ் பீச்சில் இருந்த ஜெட்டி, குடில்கள், கீற்று குடைகள் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தன. பாரடைஸ் பீச்சில், சேதமடைந்த படகு குழாமை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், வீடுர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், சங்கராபரணி ஆறு வழியாக, நோணாங்குப்பம் ஆற்றில், சென்றதால், பாதுகாப்பு கருதி, இரண்டு நாட்கள் படகு சவாரி நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆற்றில் வந்த உபரி நீர் குறைந்ததால், நேற்று முதல், படகு குழாமில் படகுகள் இயக்கப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். சீரமைக்கும் பணிகள் முடிந்த நிலையில், இரு நாட்களில், பாரடைஸ் பீச்சிற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படனர்.