மாஜி உதவி சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
புதுச்சேரி: ஓய்வு பெற்ற உதவி சப் இன்ஸ்பெக்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் துரைராஜ், 70; உதவி சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அரியாங்குப்பம் ஆற்றுப்பாலம் வழியாக சென்ற போது, இவரது எதிர் வீட்டை சேர்ந்த முருகன், அன்பு, அவர்களின் உறவினர்களான ராஜேந்திரன், ராம்குமார் ஆகிய நான்கு பேரும் அவரை வழிமறித்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, துரைராஜ், புதுச்சேரி கோர்ட்டில் 3ல் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், முருகன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் பேரில், நான்கு பேர் மீதும் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.