பழங்குடியினர் டில்லி செல்ல முதல்வர் விமான டிக்கெட் வழங்கல்
புதுச்சேரி: குடியரசு தினவிழாவில் பிரதிநிதியாக பங்கேற்கும் பழங்குடியினருக்கு முதல்வர் ரங்கசாமி விமான பயணச்சீட்டினை வழங்கி, வழி அனுப்பி வைத்தார்.குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ஒவ்வொரு மாநிலத்தை சார்ந்த பழங்குடியினர்களில் இரண்டு பேர் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவர்.அதன்படி, பாகூரைச் சேர்ந்த பழங்குடியினர் ஜெயகுமார், ஜெயந்தி ஆகியோர் மாநில பிரதிநிதிகளாக குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களை அழைத்து சென்று வருவதற்கு தொடர்பு அதிகாரியாக நல அதிகாரி பழனி நியமிக்கப்பட்டுள்ளார்.அவர்களுக்கு தேவையான குளிர்கால ஆடைக்கான தொகை மற்றும் விமான பயணச் சீட்டினை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் நேற்று வழங்கி, வழியனுப்பி வைத்தார். இதில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் உடனிருந்தார்.