ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க நகராட்சிக்கு காங்., கோரிக்கை
புதுச்சேரி: கொசுவை ஒழிக்க உள்ளாட்சி துறை இயக்குனருக்கு காங்., சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. புதுச்சேரி காங்., தலைமை அலுவலக பொறுப்பாளர் பிரதிஷ் இருதயராஜ் உள்ளாட்சி துறை இயக்குனருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிறுப்பதாவது: புதுச்சேரி முழுதும் கடந்த சில மாதங்களாக கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக மழைக்காலத்திற்குப் பிறகு தேங்கியுள்ள நீரால் அசுத்தம் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற கொசு மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கழிவுநீர் கால்வாய்கள், காலி இடங்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் சிறப்பு நடவடிக்கை எடுக்கவும், உப்பனாறு கால்வாய், சின்ன வாய்க்கால் தெரு, செஞ்சி சாலை மற்றும் ஆம்பூர் சாலைக்கு இடையே உள்ள வாய்க்கால்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.