மேலும் செய்திகள்
அனுமதியில்லாத கட்டடம் இடித்து அகற்றும் பணி
27-Sep-2025
புதுச்சேர :பெரிய மார்க்கெட் பழுதடைந்த கட்டடம் கோர்ட் அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி துவங்கியது. புதுச்சேரி மையப் பகுதியான நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் 'குபேர் அங்காடி' என்ற பெரிய மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 572 நிரந்தரக் கடைகள் ஆயிரத்துக்கு மேற்பட்ட அடிகாசு கடைகள் உள்ளன. அலங்கார பொருட்கள், சிறிய ஜவுளிக் கடைகள், பாத்திரங்கள், காய்கறி, பழம், மளிகை, மீன், இறைச்சி என தனி தனி பிரிவாக வியாபாரம் நடந்து வருகிறது. வெளியில் உள்ள மார்கெட்டுகளில் விற்பதை விட பெரிய மார்க்கெட்டில் விலை சற்று குறைவு என்பதாலும் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைப்பதாலும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மார்க்கெட் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் தற்போது மிகவும் சேதமடைந்து உள்ளதாகவும், அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக அவற்றை இடித்து அகற்ற வேண்டுமென புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் கோபால் ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட், புதுச்சேரி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளை அழைத்து உடனடியாக பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்றும்படி உத்தரவிட்டார். அதன்பேரில், நகராட்சி மூலம் முதற்கட்டமாக, பெரிய மார்க்கெட் இறைச்சி விற்பனை பகுதிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களின் 51 கடைகள் இடித்து அகற்றும் பணி நேற்று துவங்கப்பட்டது. இதற்கு, சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின், நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோர்ட் உத்தரவின் பேரில் இடிக்கும் பணி நடப்பதாகவும், புதிய கடைகள் கட்டி தற்போது இருப்பவர்களுக்கே மீண்டும் கடைகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.இதையடுத்து, வியாபாரிகள் சமாதானம் அடைந்ததை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மற்ற கட்டடங்கள் இடித்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27-Sep-2025