கல்வித்துறையில் இயக்குனரை நியமிக்க மாஜி அமைச்சர் கவர்னரிடம் கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் கல்வித்துறை இயக்குனரை உடனடியாக நியமிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர், கமலக்கண்ணன், கவர்னர் கைலாஷ்நாதனிடம் மனு அளித்தார். மனுவில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மத்திய அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, அதற்கான நிதி கோப்புகளை உரிய காலத்தில் அனுப்புவதும், மத்திய அரசின் நிதியை பயன்படுத்திய பிறகு பள்ளிகளில் ஆய்வுகள் என, பல்வேறு பணிகள், இணை இயக்குனர், துணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் ஒரு இயக்குனர் அவசியமாக உள்ளது. இயக்குனராக இருந்த பிரியதர்ஷினி பணி உயர்வு பெற்று சென்றதை அடுத்து, இதுவரை தனி இயக்குனர் நியமிக்காமல் உள்ளது. அதனால், கல்வித்துறையில் செயல்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும். அதை கருத்தில் கொண்டு உடனடியாக இயக்குனரை நியமிக்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில், கல்வித்துறை சார்ந்த தேர்வுகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போன்றவற்றை கண்காணிப்பதற்கான செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.