உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிலுவை சீருடைப்படி வழங்க அரசு... உத்தரவு; 15 ஆயிரம் அரசு ஊழியர்கள் நிம்மதி ; ரூ.20 கோடி கூடுதலாக செலவாகும்

நிலுவை சீருடைப்படி வழங்க அரசு... உத்தரவு; 15 ஆயிரம் அரசு ஊழியர்கள் நிம்மதி ; ரூ.20 கோடி கூடுதலாக செலவாகும்

புதுச்சேரி: புதுச்சேரியில் நான்கு ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இருந்த சீருடைப்படி நிலுவை தொகையை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 20 கோடி ரூபாய் செலவாகும்.புதுச்சேரி அரசு துறைகளில் சுகாதாரத் துறை, போலீஸ், தீயணைப்பு துறை, மின் துறை, எம்.டி.எஸ்., உள்ளிட்ட சீருடைய பணியாளர்களும் உள்ளனர். இவர்கள், பணியின்போது கட்டாயம் சீருடை அணிந்து பணியாற்ற வேண்டும். இந்த சீருடையை தைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள சீருடைப்படியும் வழங்கப்படுகின்றது. முன்பு மாதாந்திர படியாக வழங்கப்பட்ட இந்தப்படி, இப்போது ஒரே தவணையாக ஆண்டிற்குகொருமுறை வழங்கப்படுகின்றது.ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு முதல் சீருடைப்படி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், 2017 ம் ஆண்டு முதல் 2021ம் காலக்கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சீருடைப்படி வழங்கப்படவில்லை. நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சீருடைப்படியை வழங்க அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து நிதித் துறை பிறப்பித்துள்ள உத்தரவு:ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின்படி, பல்வேறு வகையிலான ஊழியர்களுக்கு சீருடைப்படி வழங்குவது தொடர்பான ஏற்கனவே ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 01.07.2017 முதல் 31.03.2021 வரையிலான காலப்பகுதிக்கான சீருடைப்படி நிலுவைத் தொகையை காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிற தகுதியுள்ள வகை ஊழியர்களுக்கும் சீருடைப்படியின் இத்தகைய நிலுவைத் தொகையை வழங்குவது பரிசீலிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 01.07.2017 முதல் 31.03.2021 வரையிலான காலப்பகுதிக்கான சீருடைப் நிலுவைத் தொகையை புதுச்சேரி அரசின் அனைத்து தகுதியுள்ள வகை ஊழியர்களுக்கும் பெற அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த காலகட்டத்தில் திருத்தப்படாத விகிதங்களில் வழங்கப்பட்ட சீருடை தொடர்பான வேறுபடிகள் பெற்றிருப்பின் சரிசெய்யப்பட்ட பிறகு இந்த நிலுவைத் தொகை வழங்கப்படும்.காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கான சீருடைப்படி நிலுவைத் தொகையை வழங்குவதற்கான அரசாங்கத்தின் அனுமதி, மூன்றாவது குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 2024--25 நிதியாண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே அந்த அரசாணையின் கீழ் விடுபட்ட சீருடைப்பணியாளர்கள் ஏதேனும் இருந்தால், இந்த உத்தரவின் அடிப்படையில் நிலுவைத் தொகையை பெறலாம்.இவ்வாறு நிதித் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் செலவு

நிதித் துறை உத்தரவினால் சீருடைப்பணியாளர்கள் தங்களது கிரேடுகளுக்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சீருடைப்பணியாளர்கள் பெற உள்ளனர். இருப்பினும் ஏற்கனவே வாஷிங் அலவன்ஸ் பெற்றிருந்தால் அத்தொகை கழித்து கொள்ளப்பட்டு மீதி தொகை மட்டுமே செலுத்தப்படும். தற்போது அரசு துறைகளில் 24 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில், 15 ஆயிரம் பேர் வரை சீருடை பணியாளர்கள் உள்ளனர். இந்த நிலுவை சீருடைப்படி மூலம் புதுச்சேரி அரசுக்கு 20 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை