10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கவர்னர்... ஒப்புதல்; ஓரிரு நாளில் சென்டாக் கலந்தாய்வு
புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' அல்லாத படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து,சென்டாக் கலந்தாய்விற்கான ஆயத்த பணிகள் வேகமெடுத்துள்ளது. புதுச்சேரியில், அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், பிற படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு எழுதினர். தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் அதிக அளவில் இல்லாததால், உயர் கல்வி சேர்க்கையில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அனைத்து உயர்கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனையேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டே வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதே நேரத்தில், 'நீட்' அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பம் பெற்று, தரவரிசை வெளியிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியிடாததால், கவுன்சிலிங் நடத்தப்படாமல் உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உயர்கல்விக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் மவுனம் காத்து வந்ததால், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பெரும் தவிப்பிற்கு ஆளாகினர். ஒருவழியாக 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்பு தயார் செய்து, லண்டன் சென்றுள்ள கவர்னருக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இக்கோப்பை ஆய்வு செய்த கவர்னர் கைலாஷ்நாதன், ஒப்புதல் வழங்கி, தலைமை செயலருக்கு அனுப்பியுள்ளார். அதனையொட்டி, இன்று அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியானவுடன் 'சீட் மேட்ரிக்ஸ் மற்றும் திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டு, ஆட்சேபனை பெறப்படும். அதன்பிறகு இறுதி கட்ட பட்டியலுடன் முதல் சுற்று சீட் ஒதுக்கீடு வெளியிட்டு, சேர்க்கை நடத்திட, சென்டாக் நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
சிறப்பு அனுமதிக்கு அரசு முயற்சிக்குமா
பி.இ., மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும். இன்று சீட் மேட்ரிக்ஸ், இறுதி வரைவுப் பட்டியல், முதல் கட்ட சேர்க்கை முடியவே ஆகஸ்ட் 14ம் தேதியை கடந்து விடும். அதன் பிறகு மேலும் இரு சுற்று சேர்க்கை நடத்த ஒரு மாதம் தேவைப்படும். அதனால், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு மூன்று சுற்று சேர்க்கையை முழுமையாக நடத்திட அரசு, ஏ.ஐ.சி.டி.இ.,யில் சிறப்பு அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.