வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி : கலெக்டர் விளக்கம்
புதுச்சேரி: வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் விளக்கம் அளித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணைய உத்தரவின்படி, புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர். இப்பணியில் நேற்று முன்தினம் 10ம் தேதி வரை 91 சதவீத வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வருகையின்போது, பூட்டியிருந்த வீடுகளில் உள்ள விடுபட்ட வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதன்பிறகு, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், முன்னர் வழங்கப்பட்ட படிவங்களை சேகரிக்க அனைத்து வீடுகளுக்கும் வருவார்கள். மேலும், கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு, வாக்காளர்களுக்கு உதவி புரிவார்கள். எனவே, எவரும் குழப்பம் அடைய வேண்டாம். வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் இன்னும் வழங்கப்படவில்லை என்றாலோ அல்லது படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ தங்கள் ஓட்டுச்சாவடி அலுவலரை தொடர்பு கொள்ள, https://voters.eci/gov/in என்ற இணையதள முகவரியில் உள்ள Book a call with BLO வசதியை பயன்படுத்தலாம். அல்லது ECINET App என்ற செயலியில் உள்ள Book a call with BLO வசதியை பயன்படுத்தலாம். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். ceopuducherry.py.gov.inஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அவரவர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது தங்கள் பகுதி ஓட்டுச்சாவடி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஓட்டுச்சாவடி அலுவலரின் மொபைல் போன் எண், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவனத்தின் மேல் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் https://voters.eci.gov.inஎன்ற முகவரியிலும், ECINET APP என்ற செயலி மூலமாகவும் ஆன்லைனின் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.