20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் டீசர்ட் உழவர்கரை நகராட்சி தகவல்
புதுச்சேரி : மறுசுழற்சி மையத்தில் 20 கிலோவிற்கு மேல் பிளாஸ்டிக்பொருட்களை கொடுத்தால் டீசர்ட் வழங்கப்படும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் துாய்மை இந்தியாக இயக்கத்தின் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக குப்பை கிடங்கிற்கு செல்லும் அளவை குறைக்க உத்தரவிட்டுள்ளது. அதற்காக மறு சுழற்சி மையங்களை ஆர்.ஆர்.ஆர்., என்ற பெயரில் திறக்க அறிவுறுத்தியுள்ளது.அதன் அடிப்படையில் உழவர்கரை நகராட்சி சார்பில் மறுசுழற்சி மையத்தினை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வெங்கட்டா நகர் பூங்காவில் துவக்கியுள்ளது. இதனை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் திறந்து வைத்தார். இம்மையம் வாரம்தோறும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட உள்ளது. இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறும்போது, பொதுமக்கள் தங்களிடம் உள்ள உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்களான தண்ணீர், குளிர்பானம், பினாயில் பாட்டீல், உணவு, இனிப்பு கொள்கலன்கள், பிளாஸ்டிக் பொம்மைகள், பிரஷ்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி மையத்தில் கொடுக்கலாம். அதற்கேற்ற பயனுள்ள மறுசுழற்சி பொருட்களை பெற்று செல்லலாம். 20 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட டீசர்ட் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், பிஸ்லெரி நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.