உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரிக்கு பாரபட்சமின்றி நிதி மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

புதுச்சேரிக்கு பாரபட்சமின்றி நிதி மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

புதுச்சேரி : ''புதுச்சேரிக்கு பாரபட்சின்றி மத்திய அரசு நிதி தருகிறது'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.புதுச்சேரிக்கு நேற்று வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், தவில் இசை பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள தட்சிணாமூர்த்தியை கவுரவித்தார்.பின்னர் அவர் கூறியதாவது:புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 1.46 சதவீதம் அளவே அதிகரிக்கப்பட்டுள்ளது என்கின்றனர். பல திட்டங்கள் புதுச்சேரிக்கு தரப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம், நேரடி பட்ஜெட்டில் ரூ. 3,432 கோடி ஒதுக்கி உள்ளது. ஜிப்மருக்கு ரூ.1,450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 150 கோடி, உள்கட்டமைப்பை மேம்படுத்த தரப்படுகிறது.விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை கடன் தொகை ரூ.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 16 ஆயிரம் புதுச்சேரி விவசாயிகள் பயன் பெறுவர். குடிநீர் மேலாண்மை திட்டத்திற்கு ரூ. 186 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு 90 சதவீத மானியம் புதுச்சேரிக்கு தருகிறது. மேலும், வேண்டியதை தர தயாராக இருக்கிறோம். புதுச்சேரிக்கு நிதி நெருக்கடி இல்லை. அனைத்து உதவியும் பிரதமர், உள்துறை அமைச்சர் முழுமையாக செய்கிறார்கள். பாரபட்சமின்றி நிதி தருகிறோம்.புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்ப்பது பற்றி. நிதி அமைச்சரிடம் தெரிவிக்கிறோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்கும் வகையில் நிதி ஒதுக்கியுள்ளோம். மக்களுக்கு உபயோகமான பட்ஜெட் போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2014க்கு முன்பாக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 800 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறோம். கன்னியாகுமரி உட்பட பல ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தந்து நிலங்களை கையகப்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் 'டென்ஷன்'

புதுச்சேரி பிரச்னைகள் தொடர்பாக நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதனால் 'டென்ஷன்' ஆன அமைச்சர் முருகன், பட்ஜெட் நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். புதுச்சேரிக்கு திட்டம், நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். தேவைகள் இருந்தால் கவர்னர், முதலமைச்சர் தரும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம் என்றார்.புதுச்சேரிக்கு ரூ. 10 ஆயிரம் கோடி கடன் உள்ளது. அதற்கு வட்டி கட்டவே தொகை போதாது என்று கேட்டதற்கு, தமிழக ஸ்டைலில் பேசட்டுமா என்று கூறிய மத்திய அமைச்சர் முருகன், சந்திப்பை பாதியிலேயே முடித்து, புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி