ஓலைச்சுவடியில் குறள் வெண்பா உலக சாதனை பெண்ணுக்கு பாராட்டு
காரைக்கால்: ஒலைச் சுவடியில் குறள் வெண்பா எழுதி உலக சாதனை படைத்த காரைக்கால் பெண்ணுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் கவிஞர் கனகவள்ளி, 35; கன்னியாகுமரியில், உலக திருக்குறள் சமுதாய மையம் சார்பில் நடந்த திருக்குறள் மாநாட்டில், திருவள்ளுவர் வழியில் ஓலைச் சுவடியில் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கும், அதிகாரம் ஒன்றிற்கு ஒரு குறள் வெண்பாவென 133 குறள் வெண்பாக்கள் எழுதி உலக சாதனை படைத்தார்.சாதனை புரிந்த கனகவள்ளிக்கு தமிழ்வளர்ச்சித் துறை இயக்குனர் ஒளவைஅருள், துணை இயக்குனர் பிரதாபன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். கவிஞர் கனகவள்ளி எழுதிய குறள்வெண்பாவை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன் மற்றும் சாதனை குழுவினர் கண்காணித்து உலக சாதனையாக பதிவு செய்தனர்.மரபு பா ஆசிரியர் சோலைராஜா மற்றும் மைசூர் கர்ணன் மதிப்புறு பேராசிரியர் ஏகலைவன் உறுதுணையாக இருந்ததால், குறள் வெண்பாவில் உலக சாதனை படைக்க முடிந்ததாக கனகவள்ளி தெரிவித்தார். முன்னதாக 236 மாணவர்கள் பங்கு பெற்ற திருக்குறள் முற்றோதல் மற்றும் தொல்காப்பியம் அரங்கேற்றம் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.