சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது அமைச்சர் நமச்சிவாயம் பதிலடி
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி, இ.சி.ஆர், காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று நடந்த குழந்தைகள் தினவிழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'கல்வி, விளையாட்டு துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட, 10 சதவீதம் கூடுதலாக, ரூ.950 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க புதிய திட்டத்தை துவங்கி உள்ளோம்.மாணவர் பாதுகாப்பிற்காக தொடங்கப்படும், இந்த புதிய திட்டம் குறித்து வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்' என்றார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. ஒரு சில இடங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்திருப்பதை வைத்து மாநிலம் முழுதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக குறை கூறுகின்றனர்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என மக்களுக்கு தெரியும். போலீஸ்துறையில் காலி பணியிடங்களை நிரப்பி சட்ட ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியல் ரீதியாக, புதுச்சேரி அரசு மீது காழ்ப்புணர்ச்சியோடு கூறப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்' என்றார்.