சாராய ஆலை திறப்பதை கைவிட மா. கம்யூ., வலியுறுத்தல்
புதுச்சேரி; அரசு சாராய ஆலைகள் திறக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என, மா.கம்யூ., வலியுறுத்தி உள்ளது. மாநில செயலாளர் ராமச்சந்திரன் அறிக்கை: சட்டசபையில் ஆறு சாராய ஆலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. தற்போதுள்ள 8 மதுபான தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 9 கோடி மட்டுமே வருமானம் கிடைக்கிறது. அவற்றில் 400 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். புதிதாக வரவுள்ள 6 தொழிற்சாலைகள் மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது ஏமாற்று வேலை. அண்டை மாநிலங்கள் சாராய ஆலைகள் உருவாவதற்கும், நீராதாரத்தை இழப்பதற்கும் தயாராக இல்லை. எனவே, தான் சாராய ஆலை தொழிலதிபர்கள் புதுச்சேரியை நோக்கி வருகின்றனர். மதுபான ஆலைகளால் அரசுக்கு வருவாய் கிடைப்பது குறைவாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சமூக சீர்கேடு அதிகமாகவும் இருக்கும்.மூடிக்கிடக்கும் பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகள், சிறு தொழிலகங்களை கொண்ட தொழிற்பேட்டைகள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றை மீண்டும் இயக்கிட அரசு முயற்சி எடுக்க வேண்டும். அரசு சாராய ஆலைகள் திறக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.