துப்புரவு பணியாளர்களுக்கு பாகூரில் மருத்துவ முகாம்
பாகூர் : பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில், கடந்த 15ம் தேதி முதல் வரும் 2ம் தேதி வரை துாய்மை பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகூர் கமலா நேரு திருமண மண்டபத்தில், துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமினை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.முகாமில், ஆறுபடை வீடு மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்று, துாய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில், கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் ரவி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.