புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம்; அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
புதுச்சேரி: பருவமழை தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் அவசரகால மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வட கிழக்கு பருமழை துவங்கியதை தொடர்ந்து புதுச்சேரி முழுதும் கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை கொட்டும் என்பதால், நாளை 23ம் தேதி வரை பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் பொதுமக்கள் இருக்க வேண்டும் என, வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, அமைச்சர் லட்சுமிநாராயணன் மாநில அவசர கால மையத்தில், கலெக்டர் குலோத்துங்கன், பேரிடர் மேலாண்மை துணை கலெக்டர் சிவசங்கரன், செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின், கலெக்டர் விடுத்த செய்திக்குறிப்பு: 1. மிகவும் அவசியம் இருந்தால் அன்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 2. இடி, மின்னல் நேரங்களில் வெளியில் செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். 3. வெளியில் இருக்கும்போது இடி, மின்னல் வர நேர்ந்தால், வெட்ட வெளியில் நிற்காமல் உடனடியாக அருகாமையில் உள்ள பாதுகாப்பான கட்டடத்தின் உள்ளே செல்லவும். 4. மின்கம்பங்கள், மரங்கள், பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடங்கள் கீழே நிற்க வேண்டாம். 5. குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம். 6. மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தால் அதன் அருகில் செல்ல வேண்டாம். 7.அத்தியாவசிய மருந்துகளை வாங்கி வைத்து கொள்ளவும். 8. தேங்கிய நீரின் வழியாக வாகனம் ஓட்டாமல் இருப்பது நல்லது. இது வாகனத்தை பாதிக்கும். இந்த சூழ்நிலையில் உதவி பெறுவது கடினம். 9. வீட்டில் பால், ரொட்டி போன்ற அடிப்படை அத்தியாவசிய பொருட்கள், உணவு பொட்டலங்களை இருப்பு வைத்து கொள்ள வேண்டும். 10.மின்சாரம் தடைபட்டால் அனைத்து மின் சாதனங்களையும் அனைத்து வைக்க வேண்டும். 11.சுட வைத்து வடி கட்டிய குடிநீரை குடிக்க வேண்டும். 12.வெளியில் இருந்து வரும்போது உங்களது கைகள், கால்களை சரியாக கழுவ வேண்டும். 13.வெளியில் இருக்கும்போது மின்னல் ஏற்பட்டால் மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
புகார்களுக்கு....
கனமழை பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 1077, 1070,112 என்ற இலவச எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அல்லது 94889-81070 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.