அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; 5 மணி நேரம் நீடித்த பரபரப்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ., ராஜினாமா காரணமாக 5 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.பாஜ., வில் புதிய தலைவர் மற்றும் மூன்று புதியவர்களுக்கு நியமன எம்.எல். ஏ., பதவி வழங்க, அமைச்சர் சாய் சரவணன் குமார் மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் திடீரென ராஜினாமா செய்தனர். இவர்கள் நான்கு பேருக்கும் நேற்று மதியம் 12:45 மணியளவில் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற தகவல் அவர்களுக்கு எட்டியுள்ளது. 1:45 மணியளவில் நான்கு பேரும் அக்கார்ட் ஓட்டலுக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். 2:45 மணிக்கு நான்கு பேரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரே வார்த்தையில் கூறப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களும் உடனடியாக ராஜினாமா செய்து கடிதத்தை வழங்கி விட்டனர். அமைச்சர் சாய் சரவணன் மட்டும் மாலை 4:42 மணிக்கு சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்திற்கு மனைவி அன்னப் பிரபாவதியுடன் வந்து அங்கிருந்த சாமி மற்றும் மோடி, அமித்ஷா படங்களை முட்டி போட்டு வணங்கினார்.அதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களிடம் ராஜினாமா செய்ய உள்ளது குறித்து ஆலோசித்தார். அதன் பின், முதல்வர் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்று முதல்வர் ரங்கசாமியிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்தார்.அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் 'பிரதமர் மோடி எனக்கு அமைச்சர் பதவி வழங்கினார். கட்சி தலைமை உத்தரவிட்டதால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என்று கூறினார். அதைத்தொடர்ந்து மாலை 5:55 மணிக்கு அமைச்சரின் ராஜினாமா கடிதத்துடன், கவர்னர் மாளிகை சென்ற முதல்வர் ரங்கசாமி பா.ஜ., சார்பில், ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க கொடுக்கப்பட்ட கடிதம், சாய் சரவணக்குமார் ராஜினாமா கடிதம் ஆகியவற்றை கவர்னர் கைலாஷ்நாதனிடம் கொடுத்தார்.புதுச்சேரியில் நேற்று மதியம் 12:45 மணி முதல் மாலை 5:55 மணி வரை 5 மணி நேரம் நீடித்த இந்த அரசியல் மாற்றங்களால் பெரும் பரபரப்பு நிலவியது.