அரசின் சிறப்பான பட்ஜெட் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேச்சு
புதுச்சேரி, : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரிய வாய்க்கால் புனரமைப்பதற்கான பணி களை விரைவாக செய்து முடிக்க வேண்டுமென வெங்கடேசன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார். சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:பட்ஜெட்டில் சிறப்பு நிதியாக மகளிர்களுக்கு 1,458 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 50 சதவீத மானியத்தில் இரண்டு கறவை பசுக்கள் 1,500 பயனாளிகளுக்கு வழங்கப்படும். ரேஷன் கார்டுகளுக்கு மாதாந்திர இலவச அரிசியுடன், 2 கிலோ கோதுமை வழங்கப்படும் அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.லாஸ்பேட்டை பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்க, ரூ. 44.52 கோடி செலவில் வாயு காப்பு துணை மின் நிலையம் அமைக்கும் திட்டம் வரவேற்கப்படுகிறது.லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உழவர்கரை நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என்பது வரவேற்கப்படுகிறது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரிய வாய்க்கால் புனரமைப்பதற்காக ரூ. 23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும்.மணப்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க், பொழுதுபோக்கு மையங்களை ஏற்படுத்தி, விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு, புதுச்சேரி அரசு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது என்றார்.