உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொசுத்தொல்லை உச்சக்கட்டம்! துாக்கத்தை இழந்து மக்கள் பரிதவிப்பு

கொசுத்தொல்லை உச்சக்கட்டம்! துாக்கத்தை இழந்து மக்கள் பரிதவிப்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் திடீரென கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் துாக்கத்தை இழந்து, அச்சத்தில் பரிதவித்து வருகின்றனர்.புதுச்சேரியில் ஒழிக்க முடியாத சாபக்கேடுகளில் துர்நாற்றம் வீசும் சாக்கடை, சிதறி கிடக்கும் குப்பை, புழுதி பறக்கும் துாசி படலத்திற்கு அடுத்து கொசுக்களுக்கு முதன்மையிடம் உண்டு. தினமும் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து பல்வேறு காய்ச்சல்களை பரப்பி வரும் கொசுக்களுக்கு முடிவு கட்டப்படுவதில்லை.இந்நிலையில், தற்போது புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் திடீரென கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மாலை நெருங்கியதும் கொசுக்கள் கூட்டம் கூட்டமாக வீட்டிற்குள் படையெடுத்து வருன்றன. இவை, எந்த கொசுவர்த்திகளுக்கும் கட்டுப்படுவதில்லை.மின்விசிறியை சுழலவிட்டு போர்வையை இழுத்து போர்த்தி தப்பிக்க நினைத்தால் கூட சந்து பொந்து வழியாக உள்ளே புகுந்து ரத்ததை ருசி பார்க்காமல் விடுவதில்லை. இதனால், மாலைப்பொழுது நெருங்கினாலே மக்கள், கொசுவை நினைத்து அஞ்சுகின்றனர்.சாக்கடையில் தான் கொசு உற்பத்தி அதிகரிக்கின்றது என்று சப்பைகட்டு கட்டினாலும் அது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அனைத்து பகுதிகளிலும் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. பூமிக்கு அடியில் தான் கழிவு நீர் ஓடுகின்றது, அப்படி இருக்கும்போது இந்த கொசுக்கள் எங்கிருந்து வருகின்றன என்பது மெகா கேள்வியாக உள்ளது. கொசுக்களை ஒழிக்க இருக்கும் சுகாதார துறையின் பைலேரியா பிரிவு இருக்கின்றதா என்றே தெரியவில்லை. நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் என்ன செய்கின்றன என்றும் தெரியவில்லை. அதிகாரிகள் ஏசி போட்டுக்கொண்டு துாங்குகின்றனர். அதனால் அவர்களுக்கு கொசுக்கடியை பற்றி கவலை இல்லை. ஆனால் நடுத்தர, சாமானிய மக்கள் அப்படி இல்லை. கொசுக்கடியில் தான் துாங்குகின்றனர். அரசு அதிகாரிகள், அக்கம் பக்கத்தில் உள்ள சாமானிய மக்களின் வீட்டை சற்று எட்டி பார்த்தால் கூட போதும். இரவு முழுவதும் நிம்மதியாக துாங்க முடியாமல் கொசுபேட், கொசுவர்த்தி, லிக்யூடுகளை எடுத்துக்கொண்டு அல்லோலப்படுவது தெரியும்.கொசுக்களால் ஆண்டுதோறும் மலேரியா, சிக்குன்குன்யா, டெங்கு என பல்வேறு நோய்கள் பரவுகிறது. இதனை தடுக்க மருந்து, மாத்திரை, தனி பிரிவு என ஆண்டிற்கு பல கோடி செலவிடப்படுகிறது. இந்த கொசுக்களை முன் கூட்டியே கட்டுப்படுத்தினால் நோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். அரசுக்கு பல கோடியும் மிச்சமாகும்.எனவே போர்க்கால அடிப்படையில் சுகாதார துறையின் பைலேரியா பிரிவு, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளை அரசு முடுக்கிவிட்டு அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்.

ஆராய்ச்சி அவசியம்

புதுச்சேரியில் வழக்கத்திற்கு மாறாக கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது. கொசுக்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் வி.சி.ஆர்.சி., எனப்படும் வெக்டார் கன்ட்ரோல் ரிசர்ச் சென்டர் கோரிமேட்டில் தான் உள்ளது. பைலேரியா துறை, வி.சி.ஆர்.சி., மையத்துடன் இணைந்து, புதுச்சேரியில் திடீர் கொசு உற்பத்தி அதிகரித்தற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.கொசுக்களை லார்வா நிலையிலேயே அழிப்பதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thiyagarajan S
பிப் 06, 2025 22:54

திராவிட மாடல் அரசு ஒழிந்தால் கொசு தொல்லையும் ஒழிந்து விடும்.....


Selvarajan A.K.A.
பிப் 06, 2025 20:03

விழுப்புரம் நகரத்திலும் கொசுத் தொல்லை மிக மிகக் கடுமையாக அதிகரித்து உள்ளது. வெளியில் நின்றால் ஆயிரக்கணக்கான கொசுக்கள் மொய்க்கின்றன. வீட்டில் கேட்க வேண்டியதில்லை. நகராட்சி இதனைக் கண்டு கொள்வதில்லை. பொது மக்களின் நிலை பரிதாபம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை