என்.ஆர்.ஐ., சீட்டு ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரணை: அன்பழகன் கோரிக்கை
புதுச்சேரி: என்.ஆர்.ஐ., சீட்டு ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: சென்டாக் கலந்தாய்வில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்துள்ளனர். ஆனால் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களையும் அரசு பரிசீலினை செய்யாமல் மூடி மறைக்கிறது. இது அகில இந்திய அளவில் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைக்குனிவாகும். மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்கள் எடுத்த புதுச்சேரி மாணவர்களின் இடங்களை விஞ்ஞான ரீதியில் முறைகேடாக என்.ஆர்.ஐ., கோட்டாவின் மூலம் தொடர்ந்து அபகரித்து வருகின்றனர். இது குறித்து கவர்னர் சி.பி.ஐ., விசாரணைக்கு கொண்டு வரவேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டு வரும் நவீன கல்வி குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி சட்ட ரீதியான நடவடிக்கைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும். இந்த முறைகேட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு தொடர்பு இருந்தால் அந்த கல்லூரியின் அனுமதியை ரத்த செய்ய தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். இது சம்பந்தமாக கவர்னரை நேரில் சந்தித்து அ.தி.மு.க., சார்பில் புகார் கடிதம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.