சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து பாதிப்புஅரியாங்குப்பம்: சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால், புதுச்சேரி - கடலுார் சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் காலனி பகுதிக்கு சுடுகாடு இல்லாமல் இருந்தது. நீண்ட போராட்டங்களுக்கு பின், கடந்த 2009ம் ஆண்டு, நல்லவாடு சாலை அருகே, 20 ஆயிரம் சதுரடியில், அரசு இடம் ஒதுக்கீடு செய்தது.அந்த இடத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில், சுற்றுச் சுவருடன் சுடுகாடு கொட்டகை கட்ட பூஜை போடப்பட்டது. அந்த இடத்திற்கு பக்கத்து இடத்தின் உரிமையாளர், சுடுகாட்டு இடத்தை உரிமை கோரினார். அதனால், சுடுகாட்டு கொட்டகை கட்டும் பணி தடைப்பட்டது. அதனை அறிந்த அப்பகுதி மக்கள், சுடுகாட்டு இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பதை கண்டித்து நேற்று காலை 11:00 மணிக்கு புதுச்சேரி - கடலுார் சாலையில் தவளக்குப்பம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த, தாசில்தார், பிரிதீவி, எஸ்.பி., பக்தவச்சலம், அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் உள்ளிட்டோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனையேற்று காலை 11:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால், புதுச்சேரி - கடலுார் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.