அரசு துறைகளில் 10 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்; எதிர்க்கட்சி தலைவர் சிவா பகீர் குற்றச்சாட்டு
புதுச்சேரி, : மத்திய உள்துறை அமைச்சகத்தின் கன்ட்ரோலுக்கு புதுச்சேரிபோய்விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு ஒன்றும் சம்பந்தம் இல்லை என எதிர்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.முதலியார்பேட்டையில் இண்டியா கூட்டணி சார்பில் நடந்த பந்த் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:இந்தியாவில் புதுச்சேரியில் தான் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக குறைந்தபட்சம் கூலி உயர்த்தப்படவில்லை. உயர்த்துவதற்காக போடப்பட்ட அரசாணையும் அமல்படுத்தப்படவில்லை. அரசு ஊழியர்களாக உள்ள வவுச்சர்கள் ஊழியர்களுக்கு கூட அமல்படுத்தப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்களிலும் இதே கதை தான். புதுச்சேரியில் மக்களுக்கான அரசாங்கம் நடக்கவில்லை. தொழிலாளர் சட்டங்களை நீர்த்துபோக செய்துவிட்டனர். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அவர்களை கோர்ட் வழியாக வீட்டிற்கு அனுப்பும் வேலையை அரசு செய்து வருகின்றது. இதனால் புதுச்சேரியில் அரசு துறைகளில் 10 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது. புதுச்சேரியில் நடக்கும் அரசியல் மாற்றங்களை பொதுமக்கள் ரசிக்கவில்லை. 3 பேரை எடுத்துவிட்டு புதிதாக 3 பேரை போடுகின்றனர். ஒரு அமைச்சரை எடுத்துவிட்டு வேறு அமைச்சரை போடுகின்றனர். இந்த இரட்டை ஆட்சியில் இது எங்களுடைய சாதனை என்று ஒன்றை கூட ஆளும் கட்சியினரால் சொல்ல முடியவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கன்ட்ரோலுக்கு புதுச்சேரிபோய்விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு ஒன்றும் சம்பந்தம் இல்லை.இவ்வாறு எதிர்கட்சி தலைவர் பேசினார்.
கவர்னர் சந்திரமுகியாகிவிட்டார்
எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசும்போது, 'இப்போது வந்துள்ள கவர்னர் முழுமையான பா.ஜ,., தலைவராக செயல்படுகிறார். ஏற்கனவே இருந்த கிரண்பேடி, தமிழிசையை தாண்டி, இப்போது முழு சந்திரமுகியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்' என்றார்.