பிரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தில் ஓலைச்சுவடி தகவல் கண்காட்சி
புதுச்சேரி ஒயிட் டவுன் செயின்ட் லுாயிஸ் வீதியில், கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் இயங்கி வருகிறது. பிரான்ஸ் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம், இந்திய பண்பாட்டை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக இங்கு ஒலைச்சுவடிக்கென்றே நுாலகம் ஏற்படுத்தப்பட்டு, 8,400 ஓலைச் சுவடி கட்டுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் 5000 கிரந்த எழுத்து ஒலைச்சுவடி கட்டுகள், 1000 தமிழ் ஒலைச்சுவடிக் கட்டுகள், 400 திகழாரி மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன. தெலுங்கு, நந்தி நாகரி மொழிகளில் எழுதப்பட்ட ஒலைச்சுவடிகளும் உள்ளன. இந்த ஓலைச்சுவடிகளை பூச்சிகள் அரித்து விடமால் இருக்க ஒவ்வொரு ஏட்டிலும் 'லெமன் கிராஸ் ஆயில்' தடவியும், காலத்துக்கும் அழியாமல் இருக்க அனைத்தையும் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டுள்ளது.இந்த ஓலைச்சுவடிகளில் 250ஐ மட்டும் எடுத்து அதன் காலம், பிறப்பிடம் அதன் எழுத்து வடிவங்கள் அதனை எழுதியவர்களின் அறிவியல் நோக்குகள் உள்ளிட்டவை கண்டறியப்பட உள்ளது. இதற்காக ஜெர்மனி ஹம்பர் யுனிவர்சிட்டி ஆய்வாளர்கள், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில், கண்டெய்னரில் ஆராய்ச்சி கூடம் அமைத்து நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.ஆய்வு பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் கண்காட்சி நடந்து வருகிறது.இதில், ஓலைச்சுவடிகளை எழுத மற்றும் உருவாக்க பயன்படுத்தப்பட்ட 158 தாவரங்களின் பெயர்கள் மற்றும் அதற்கான மூலப் பொருள்கள், அழியாமல் இருக்க பயன்படுத்தப்பட்ட 18 திரவ பொருட்கள், ஓலைச்சுவடிகளின் வரலாறுகள் உள்ளிட்டவை ஆங்கில விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இதனை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
காவி நிற ஓவியம்
பல ஓலைச்சுவடிகளில் கருப்பு நிறத்தில் எழுத்து, படம் மட்டுமே இருக்கும் நிலையில், ஒரியா மொழியில் எழுதப்பட்ட ஒரு ஓலைச்சுவடியில் வரையப்பட்டிருந்த படத்திற்கு காவி நிறம் பூசப்பட்டிருந்தது. இதற்கு செந்துாரம் பயன்படுத்தியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.